Wednesday, May 13, 2009

இலையுதிரா காலம்


முடிவற்ற கரைதனில்
மீய்ந்துகிடக்கும் அலைகளை
அள்ளி பருகுகிறேன்
தீர்வதாயில்லை தாகம்

கவிதைகள் சேகரித்த
காகிதங்கள் எரித்து
அனல் சேர்க்கிறேன்
காய்வதாயில்லை குளிர்

அரிமாவாய் வென்ற
இரைதனை காகமாய்
கொத்தி உன்கிறேன்
அடங்குவதாயில்லை பசி

ஆழிப்பேரலைகள் சுமக்கும்
சூராவளி காற்றாய்
பலம்கொண்டு ஈர்க்கிறேன்
உதிர்வதாயில்லை இந்த சிற்றிலை!

Friday, March 06, 2009

கனவுகள்

இமைகள் வழியே
வழிந்து நிற்கும் க‌ன‌வுகளை
தலை‌ய‌னை வழியே
ஒழுகவிட்டு விழிக்கிறேன்

ச‌ன்னல் திறைவிலக்கி
கதிரவனின் ஒளிகொண்டு
அறையில் நிரம்பியிருக்கும்
இருள் துடைத்தெடுக்கிறேன்

ஆதவனின் கறம்பட்டு
மலரும் பூக்கள்
வாடையற்றுகிடக்கும் காற்றை
மணம்வீசும் தென்றலாய் மாற்ற‌
புன்னகைக்கிறேன்

இமைக்கும் பொழுதில்
நிகழ்ந்து போகும் நிகழ்வுகள்
வெற்றிரவுகளில் இமைகளுக்குள்
வந்து வழிந்து நிற்கின்றன‌

சில நினைவுகள் இப்படித்தான்
சில நிகழ்வுகள் இப்படித்தான்
சில கனவுகள் இப்படித்தான்
இமைதட்டும் சிறுநொடிக்குள்
இதழ்மலர்ந்து மறைகின்றன‌...

Wednesday, January 07, 2009

இடைவெளி...


வடிவமைத்த‌ எழுத்துக்கள்
கோர்த்தமைத்த வார்த்தைகள்
சேர்ந்தமைத்த‌ வரிகள்
நிரம்பமைந்த கவிதை
சுமந்த வெள்ளைத்தாள்
தாங்கிய தென்றலில்
படரும் சுகந்தத்தை
உரிமைகொண்டாடும் மலர்கள்
ஏந்திய முன்பனிகளை
செங்கதிரால் மெல்ல உருக்கும்
அதிகாலை ஆதவனின்
அழகிய உதயம் கண்டு
மறந்துவிட்டிருந்தது நிகழ்வுகளை மட்டுமல்ல‌
நிறைந்திருக்கும் நினைவுகளையும்தான்...

Saturday, November 22, 2008

நிலவிற்கு ஓர் பயணம்!


சந்த்ரயான் (நிலவு ஊர்தி) வெற்றிகரமாய் அக்டோபர் 22, 2008 அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமதனால் விண்ணில் செலுத்தப்பட்டு, மேலும் Moon Impact Probe முலமாய் குழந்தைகள் தினமன்று திரு. அப்துல் கலாம் அவர்களின் யோசனைப்படி நம் தேசியகொடியை நிலவின் முகம்தனில் பதித்தாகிவிட்டது.

வெற்றிகரமாய் இதை சாதித்த இஸ்ரோவை தலைவணங்குகிறேன். இந்த முயற்சியை எண்ணி இரண்டு வருடங்கள் முன்பு பதிவிட்ட ஓர் பதிவை நான் நினைவுகொள்ள விரும்புகிறேன். மென்மேலும் சாதனைகள் தொடர ஆசைகொள்கிறேன்.

Wednesday, November 12, 2008

எதிர்பார்த்தல்


வண்டுகளற்ற கானகத்தில்
மலரும் பூவாய்,
விடியல் கடந்த
முன்தினமொன்றில்
புலர்ந்து கிடக்கிறேன்

கரைதனில் முகம்புதைக்கும்
அலைகளின் நுரைகளாய்,
துடிப்புகள் அதிர‌
மணல் கூட்டில்
நித்திரை பயில்கிறேன்

நிறமிழந்து வண்ணம்கொண்ட‌
சருகுகள் சாலையோரமாய்
வரவுகளேற்க,
நொறுங்கும் ஒலிகளில்
வ‌லிக‌ள் தொலைக்கிறேன்

இறகினும்மெல்லிய தாள்
சுமந்துவந்த கவிதையில்
மனதின் அறைகள் கனக்க‌,
உறையும் நொடிகளில்
உருகுபனியாகிறேன்


இன்று பிரியும்தினம் கேட்கபடுகிறேன்,
நான் இறக்கும்தினமறியேன்
வேண்டுமெனில் துறக்கும்தினம்
குறித்துவைக்கிறேன் கேள்!

Sunday, September 21, 2008

என்ன இல்லை?


என்ன இல்லை இங்கே
என் என்னைத் தவிர

என்ன இல்லை இங்கே
என் எண்ணம் தவிர

என்ன இல்லை இங்கே
என் அன்னைத் தவிர

என்ன இல்லை இங்கே
அந்த அன்பைத் தவிர
'
என்ன இல்லை இங்கே
அந்த கனவைத் தவிர
'
என்ன இல்லை இங்கே
அந்த நினைவைத் தவிர
'
என்ன இல்லை இங்கே
அந்த நொடியைத் தவிர
'
என்ன இல்லை இங்கே
என் கவிதைத் தவிர

என்ன இல்லை இங்கே
இந்த தனிமைத் தவிர


யாதுமாகி நீக்கமற
ஏதுமற்று நிறைந்திருக்குமிந்த
நிகழ்வென்னும் முடிவிலியின்
வியாபித்தலால் இயலே சொல்
என்ன இல்லை இங்கே
என் என்னைத் தவிர?

('லுக்காசுப்பி (கண்ணாமூச்சி)' எனும் 'இரங் தே பஸந்தி' பாடலின் பாதிப்பில் கிறுக்கியது. முக்கியமாக அதில் வரும் 'இங்கே அனைத்தும் இருக்கின்றன இருந்தும் தாயே உணருகின்றேன் நீயின்றி தனிமையாய்' என்ற வரிகள், சொல்லத்தேவையில்லை இரஹ்மானின் இசையில்!)

Saturday, September 06, 2008

மீண்டும்... காதல்! - II

'

சிறகுகளை ஏன் உதிர்த்தாய்,
வெண்புறாக்களும் இன்று
பறக்க மறுத்து
நடை பயிலுகின்றன!

தோட்டத்தில் ஏன் இதழ்பிரியா
புன்னகை சிந்தினாய்,
ரோஜா மொட்டுக்களும் இங்கே
இதழ்திறக்க மறந்தன!

புள்ளிக்கோலம் ஏன் வைத்தாய்,
தென்றலும் இதோ
பூக்களைவிட்டு உன் விரல்சுற்றி

கோலமிடுகிறது
'
நதியினில் ஏன் நீராடினாய்,
புனலும் இதோ
ஆற்றைவிட்டு உன் இல்சுற்றி
குடியிருக்கிறது!

ஞாயிறினும்முன் ஏன் உதித்தாய்,
இரவும் இதோ
காலம்விட்டு உன் ஞாலம்சுற்றி
தவித்திருக்கிறது!
'
'
தலைசாய்த்து ஏன் இமைதட்டினாய்,
இதயம் இதோ
நெஞ்சம்விட்டு உன் விழிசுற்றி
துடித்திருக்கிறது!!