செவ்வாய், ஜூலை 15, 2008

வெறுமை...


கால்தடம் பதியா கடற்கரையின்
மிருதுமணல் தழுவிச்செல்லும்
நுரைகளின் வெடிப்பில்!

கவிபடைக்கும் கண்கள் காணா
கானகத்தின் ஊடே இதழ்மலர்ந்த
பூக்களின் சிரிப்பில்!

நீர்தொலைத்து தொலைந்துபோன
கார்மேகங்கள் சுமந்த
நீலவானின் நீட்சியில்!

முற்றுபெற்ற நிகழ்வுகளின்
முற்றுபெறா நினைவுகளின்
விழிவழி தனிமை நீரில்!

கேட்கநினைத்தும் மொழியாமலே
தொடரும் அழைப்புகளின்
அர்த்தமறைந்த வார்த்தைகளில்!

நூற்றாண்டுகளை கடக்கும்
ஆசையை திணிக்கும்
நகரா இந்த நொடிகளில்!


என எதிலெதிலோ
தேடமுயல்கிறேன்
உயிருணர்த்தும்
சில வலிகளை...