ஞாயிறு, ஜூன் 15, 2008

அறிந்தும் அறியாமலும்!


அறியாததாய் அறிந்தததை
அறிவதற்கு அறியாமலே
அறிவாய் கேட்கப்படுகிறேன்

அறியாமலும் அறிந்ததாய்
அறியாததை அறிவதாய்
அறிவின்றி உரைக்கிறேன்

அறியவைக்கும் ஆவலிருந்தும்
அறியவைப்பதாய் இல்லாமல்
அறிவதற்கு ஏதுமில்லாததாய்
அறிவாய் வார்த்தைகள்

அறியத்துடிக்கும் ஆர்வமன்றி
அறிந்துவைக்கும் அக்கறைகொண்டு
அறியயியலாமல் ஆராய்ந்துகிடக்கிறேன்
அறிவில்லாமல் அவ்வார்த்தைகளை

அறிந்ததை
அறியாததாய் நீயும்
அறியாததை
அறிந்ததாய் நானும்
அருகாமையில்லா எதிர்கரைகளில்

அறிந்தும் அறியாமலும்
அறிந்ததாய் அறியாததை
அறியாமலே அறிவதாய்
அறிவாய் கழிக்கிறோம்
அருகிலமர்த்தும் நமக்குமட்டுமான
அருமையான சிலநொடிகளை...

திங்கள், மே 19, 2008

நீர்தனில்...

'
மழையின் துளிகள்
பிடித்து நடக்கிறேன்

குளத்தின் ஆழம்
குடித்து மூழ்குகிறேன்

நதியின் வேகம்
எதிர்த்து மறைகிறேன்

கடலின் பிரம்மாண்டம்
கண்டு மயங்குகிறேன்

இங்கே பனித்துளியில்
எனை மறைத்து
உயிரின் ஆழம் தேடுகிறேன்

நான் அழகாய்
நீர்தனில் கரைகிறேன்,
இங்கே ஆழமாய்
நீர்தனில் கரைகிறேன்!

சனி, ஏப்ரல் 26, 2008

ஆகினாய்...


வரிகளில் உனை வடித்துப்பார்க்கிறேன்
இங்கே கவிதையாகிப்போனாய்

கல்லில் உனை தரிசிக்கத்துடிக்கிறேன்
இங்கே கண்களாகிப்போனாய்

பூக்களில் உனை அலங்கரிக்க ஆசைகொள்கிறேன்
இங்கே தோரணமாகிப்போனாய்

அழகிலெல்லாம் உனை ஆராதிக்க எத்தனிக்கிறேன்
இங்கே இயற்கையாகிப்போனாய்

என்னில் உனை காணவிரும்புகிறேன்
இங்கே நீ நானாகிப்போனாய்

மெய்ஞானம்தனில் உனை கண்டுகொள்ள அலைகிறேன்
இங்கே விஞ்ஞானமாகிப்போனாய்


இன்னும் இயலோடு இசையாகிப்புன்னகைக்கிறேன்
என் கண்ணனே...
இங்கே எல்லாமும் நீயாகிப்போனாய்!

சனி, ஏப்ரல் 19, 2008

மலரா!!


மலராமல் நிற்கின்றன
நீர்விட்ட பூக்கள்
காற்றில் மிதக்கும்
கந்ததகங்களில் மூச்சுத்திணறி

முடிக்கப்படாமல்
இறைந்து கிடக்கின்றன
கிறுக்கிவைத்த காகிதங்கள்,
மையிட உதிரமுமின்றி
காய்ந்துகிடக்கும் எழுதுகோல்
'
சற்றுமுன் கைகாட்டி
புன்னகைத்த அன்னை
வின்னிலிருந்து விழுந்த
காலனின் காலடியில்,
வீதியெங்கும் தேடித்திரியும் மழலை

கனவுகள் சுமந்த கவிதைகள்
மணற்குவியலின் மத்தியில்
கசங்கிய பூக்களாய்,
சோலையது பாலையாய்

இரைகள் ஏராளமாயினும்
கழுகுகள் பறக்கக்கூட
வின்னில் இடம்தாரா
போர் மேகங்கள்

உயிர் மட்டும் போதும்
இங்கே கடல்கடக்கும்
முடிவில்லா பயணத்தின் தொடக்கம்

எதிரிகளும் அன்பர்களும்
அங்கே அடையாளம் தெரியாமல்,
முடிவில்லா பயம்தனில் ஈழம்!
'
'
நிலாரசிகன் அவர்களின் இந்த கவிதை மற்றும் நண்பர் கார்த்திக் அவர்களின் இந்த பதிவு மூலம் பார்த்த படம், இரண்டின் தாக்கத்தில் கிறுக்கியது இது!

சனி, ஏப்ரல் 12, 2008

அனல்தனில்...


நெருப்பின் விரல்பிடித்து
எழத்துடிக்கிறேன்

அனலின் கதகதப்பில்
பறக்க முயல்கிறேன்

ஆதவனின் தீக்கரம்பற்றி
மிதக்கப்பார்க்கிறேன்

கனலதன் இறக்கைப்பற்றி
விடுதலை வேண்டுகிறேன்

வெந்து சாம்பலாகும்
இயற்கையின் நடுவே
அதை எய்தவிரும்புகிறேன்
'
இங்கே சுடர்வைத்து
எனைக்கொளுத்தி
இருளில் ஒளிந்த
உண்மைகள் தேடுகிறேன்
'
நான் மெதுவாய்
அனல்தனில் உறைகிறேன்,
இன்னும் அழகாய்
அனல்தனில் உறைகிறேன்!

திங்கள், மார்ச் 31, 2008

மீண்டும்..... காதல் :)

[எந்த காரணத்துக்காக சென்றேனோ அது நினைத்தபடி போகாததால் (வழக்கம்போல்) திரும்பிவிட்டேன்! அதுபாட்டுக்கு நடக்கும்போது நடக்கட்டும் நாம திரும்பவும் கிறுக்கவேண்டியதுதான் :)]



பட்டின் இறகுகள்,
தென்றல் தொடத்துடிக்கிறது...
உன் கண்கள் தழுவிய
என் விரல்கள் போல்


பூவின் இதழ்கள்,
புல்வெளி இஸ்பரிசிக்கத்துடிக்கிறது...
உன் முகம் பதிந்த
என் மார்பு போல்

மஞ்சள் ஆதவன்,
தொடுவானம் ஏந்தத்துடிக்கிறது...
உன் கன்னம் தாங்கிய
என் தோள் போல்


இலைகள் போர்த்தி,
ஈரமணல் நுகரத்துடிக்கிறது...
உன் கூந்தல் மூடிய
என் முகம் போல்

பனித்துளி போர்த்தி,
மொட்டு மலரத்துடிக்கிறது...
உன் இமை மறைத்த
என் விழிகள் போல்

'

'

ரோஜாவின் இதழ்கள்,
இன்னும் சிவக்கத்துடிக்கிறது...
உன் முத்தத்தால்
என் உதடுகள் போல் :)

திங்கள், மார்ச் 17, 2008

நிஜம் இரசிக்கும் காலம்...!

'


கனவுகளின் தேசமிது

கற்பனைகள் இனிவாராது,

கவிதைகளின் வாசலது

காற்றும் சற்று தாமதிக்குது,

நினைவுகளின் முற்றம் அது

புன்னகைகளின் தொடர்சியும் அது,

இனி நிஜம் இரசிக்கும் காலம் இது!


கிறுக்கியவரை போதும்!


கற்பனைகளுக்கு வந்தது பஞ்சம், ஏனெனில் நிஜம்தனை இரசிக்கும் காலம் இதோ :)

வரிகளுக்கு சற்று ஓய்வு சொல்லி செல்கிறேன் அதுவரை, கவிதை ஒன்றே கவிபாடும் அழகை கீழே கண்டு இரசியுங்களேன்!

கொள்ளை அழகு...


என் பதிவுகளை இரசித்து வாழ்த்திய அனைத்து அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!

அன்புடன்
சதீஷ்

ஞாயிறு, மார்ச் 02, 2008

புன்னகை-தேன் :)


இரவும் பகலும் முத்தமிட்டுக்கொள்ள
விடியல் புன்னகைக்கிறது

ஜன்னலோரமாய் குயில்வந்து பாட
தென்றல் புன்னகைக்கிறது

மெல்லநான் சோம்பல் முறிக்க
தலையனை புன்னகைக்கிறது

கடமைகள் முடித்து குளியல்போட
வெந்நீர் புன்னகைக்கிறது

வாசம் தெளித்து எடுத்து உடுத்த
துணிகள் புன்னகைக்கிறது

தேநீர் அருந்த பாலை காய்ச்ச
சுடும் ஆவி புன்னகைக்கிறது

நாள்தனைதொடங்க கால்கள் பயணிக்க
பாதை புன்னகைக்கிறது

மெதுவாய் தூவும் தூரலில் ஒளிசிதற
வானவில் புன்னகைக்கிறது

பாதையோரமாய் புதிதாய் பூக்கள் மலர
பூவிதழ்கள் புன்னகைக்கிறது

சாலையில் அன்னையின்
பிடியிலிருந்து குதித்தோடும் மழலை
எனைநோக்கி புன்னகைக்க,
அட!!
என் இதழ்களும் இதோ புன்னகைக்கிறது :)

திங்கள், பிப்ரவரி 11, 2008

தொலைத்த மௌனங்கள்!

'

கேள்விகள் விடையின்றி கழிந்தன என்னளவில்
கேள்விகளே இங்கில்லை அவளளவில்
இடையில் கடந்திருந்ததோ பரிதாபமாய் காலம்!

கேள்விகளுக்கு உயிரில்லை என்றாள்
இறந்த அவைகளை நான்
இறக்கும்வரை சுமக்கவைத்தாள்

ஆரம்பங்கள் அழகுதான்
அதில் தொடங்குவது புன்னகைகள்,
தொலைந்ததாய் கூறும்போது
எஞ்சுவது நீர்துளிகள் மட்டுமே!

காரணங்கள் அவை அறிவதரிது
முகம் நான் இனி பார்ப்பதரிது
ஓர்முகம் என்றும் அறியாதது!

பாதைகள் மங்கும் தூரம் தூரத்திலில்லை
இருந்தும் காலம் இன்னும் முடிந்துவிடவில்லை
கேள்விகள் மீண்டும் உயிர்பெறலாம்
அதுவரை மீண்டும் நான் பேசும் ஊமையாய்!

ஒருமௌனம் கலைய வேறு உரை
ஒருகூண்டு திறக்க வேறு சிறை
இங்கே உரைகளும் சிறைகளும்
மட்டுமே மாறுகின்றன

அவள் தொலைத்தது அங்கே மறுமுகமா
நான் தொலைத்தது இதில் நிகழ்வுகளா
நாங்கள் தொலைத்தது இங்கே காரணங்களா

எதுவாகிலும் இன்று தொலைந்து போனதோ
இருவருக்குமிடையே வார்த்தைகளற்ற மௌனங்கள்!

ஞாயிறு, பிப்ரவரி 03, 2008

காற்றில் ஓர் கவிதை!

'
சின்னாபின்னமான கட்டிடங்கள்
சிதறிகிடக்கும் துகள்கள்
எங்கும் தெரிக்கும் குருதிகள்
காதை பிளக்கும் ஓசைகள்

நடக்க எப்போதோ மறந்துபோய்
நில்லா ஓட்டத்தில் என் கால்கள்

தாய்மண்ணின் மானம்காக்க
நான் மௌனம் கலைந்தேன்
இங்கே வீரனெனும் மூடியனிந்தேன்
'
காரணங்கள் நான் அறியேன்
அது ஆள்பவர்களின் கவலை
உயிர் குடிக்க வந்தேன்
என்னுயிர் துறக்கத் துனிந்தேன்

சிதறிய துகள்களில் தாவிவிரைந்தேன்
பதறிய என்னுள்ளத்தை ஆற்றதுடித்தேன்
இடரிய முகங்களை கொன்றுகுவித்தேன்

பறக்கும் தோட்டாக்கள் என்மார்பை பிளக்க
இதயம் இதற்குமேல் துடிக்க மறுக்க
என்கால்கள் கூட நிலைகொண்டுவீழ
வீழ்ந்துகிடக்கிறேன் புழுதியில்
மூழ்கிக்கிடக்கிறேன் என்குருதியில்

உனக்காய் என்பணி நான் செய்தேன்
எனக்காய் நாடே ஒன்று செய்வாயோ!

ஈன்றவளிடம் போய் சொல்
உன்மகன் தாய்க்குத்தாயான
நாட்டின் மானம் காத்தவனேன்று

பெற்றவரிடம் போய் சொல்
உன்பிள்ளை ஊருக்காக உயிர்தந்து
பெருமை சேர்த்தவனென்று

என்னவளிடம் போய் சொல்
உன்னவன் உனக்காக சேர்த்தது
களத்தில் சிகப்பு பூக்களென்று

என்மைந்தனிடம் போய் சொல்
உன்தந்தை உனக்கு கற்றுதந்தது
வாழ்விலென்றும் துணிச்சலென்று

விரல்கள் அசையமறுக்க
கண்களில் பார்வைமங்க
எஞ்சிய என்னுயிர் கொண்டு
காற்றில் ஓர் கவிதை வறைகிறேன்
தென்றலே அதை நீ சற்று
சேருமிடம் சேர்ப்பாயோ!

ஞாயிறு, ஜனவரி 27, 2008

ஒன்றே ஒன்று - எழுதியதில் பிடித்தது!

'
மனதில் உதிக்கும் வார்த்தைகளை வரிகளாக அடுக்கி வைக்கும் ஒரு பதிவேடாக மட்டுமே இன்றுவரை என் வலைப்பதிவு இருக்கிறது.

முதன்முறையாக "ஒன்றே ஒன்று - எழுதியதில் பிடித்தது!" என்று சில பத்திகள் என்னை எழுத வைத்த திவ்யாவிற்கு முதலில் நன்றி! நான் கிறுக்கியவைகளைப்பற்றி எழுத நல்ல சந்தர்ப்பம்.

கொஞ்சநாளாய் அடுத்து என்ன எழுதலாம் என்று யோசித்தால் எதுவும் தோன்றவில்லை! சரி என்றாவது ஏதாவது தோன்றினால் பார்த்துகொள்ளலாம் என்றிருந்தால் அந்த நேரம் பார்த்து தொடர் ஓட்டம் என்று என்னை இழுத்துவிட்டுவிட்டார்.

"உன் குழந்தைகளில் எது உனக்கு மிகவும் பிடித்தது என்று கேட்டால் என்னசொல்ல?", என்றெல்லாம் வசனங்கள் பேசினால் தாய்மையை வைத்து க(வி)தை எழுதிய திவ்யா என்னை அடிப்பார்!

2007'ல் நான் எழுதியவற்றில் எதை மிகமிக விரும்பினேன்?

இயற்கையோடு ஐக்கியமாகிவிட ஆசைகொண்டு இயற்கை எய்தவேண்டுமென்று நான் எழுதிய 'இயற்கையே என்னில் வா'

நண்பர்களின் ஆழமான காயங்களின் பாதிப்பை அருகிலிருந்து உணர்ந்ததன் விளைவாய் உதித்த 'உனக்கு பிறகான நாட்களில்'

சிலஇரவுகளில் நமை தூங்கவிடாது அதிர்வூட்டும் கனவுகளைப்பற்றி எழுதும் ஆவலில் கிறுக்கிய 'இருளில்'

அயல்தேசம் அரவணைத்தாலும் தனிமை உணர்வுகளின் பாதிப்பில் தோன்றிய 'டாலர் கனவுகள்' மற்றும் 'என் ஜன்னலோரம்'!

எழுதிவிட்டு பதியாமலே போன என் நீண்ட கிறுக்கலொன்று!

எதை சொல்ல...

முடிவில்லா பயணத்தைப்பற்றி எனக்குள் தோன்றிய எண்ணங்களில் உதித்த 'பயணத்தில்' சென்ற வருடம் எழுதிய சொற்ப பதிவுகளில் மிகமிக ஆழ்ந்து எழுதிய ஒன்று. மாலை மயங்கும் நேரமும், தொடரும் சில சிந்தனைகளின் பாதிப்பும், தனிமையில் நான் போய்கொண்டிருந்த அவ்வேளையுமாய் என்னை எழுதத்தூண்டியதன் விளைவே அந்த வரிகள்! அதை படிப்பவர்களுக்கு அதன் அர்த்தம் முழுமையாய் புரியுமா என்று அறியேன், நானே அதன் அர்த்தத்தை இன்னும் தேடிக்கொண்டுதானிருக்கிறேன்! 2007'ல் நான் எழுதியதில் அதுவே எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக கருதுகிறேன்.


நான் எழுதிய அனைத்திலும் என்றுமே மிகவிரும்புவது 'நினைவுகள்'. தன்னுடனான நினைவுகளைப்பற்றிக்கேட்டு தன்னையும் அறியாது என்னை முதன்முதலாய் முழுநீளக்கவிதை எழுதவைத்தவர் எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அற்புதமான என் தோழி ஒருவர். என் கண்களுக்காக மட்டுமே சில வரிகள் கிறுக்கிகொண்டிருந்த நான் முதன்முதாலாய் இன்னொருவரின் பார்வைக்காக ஆவலுடன் எழுதியது 'நினைவுகள்'! அவரின் பாராட்டுதலே வலைபதிவு தொடங்க நம்பிக்கை தந்தது.

பி.கு: வலைபதிவில் உள்ள 'நினைவுகள்' நான் பொதுவாக எழுதிய ஒன்று.

தொடர் ஓட்டத்தில் இழுக்க ஐந்து பேர் எல்லாம் எனக்கு தெரியாதே, வலையில் என்னை தெரிந்திருப்பதே ஐந்து பேர் தானே!!

நான் தொடர் ஓட்டத்திற்கு அழைப்பது,

1. தினேஷ்
2. இரசிகா
3. நித்யா

ஞாயிறு, ஜனவரி 13, 2008

மல்லிகை இரவுகள்...


பூமியின் ஈர்ப்பை எதிர்த்தபடி
இனியும் முடியாது என்றபோதும்
உன்முகம் காணும் காரணத்தால்
கரங்கள் சிவக்க முயற்சியைவிடாமல்
மெதுவாய் ஆதவன் கீழ்சாயும்காலம்

உனைபார்த்தபடி நான்
விழிகள் மட்டும் பார்த்தபடி நீ!
'
தொலைவில் பறக்கும் குயில்கள்
எழுப்பும் இனிய காணத்தை
சுமந்து நமைகடக்கும் காற்றின்
அலைகளுடன் கலந்து
அதனினும் இனிமையாய்
ஒலிக்கும் உன்பேச்சு
'
பேசுவது விழிகளா இல்லை
அசையும் உன் உதடுகளா
என்பதை என் விழிகள்
அறிந்த போதிலும்
உதடுகளையே இரசித்தன!
'
உதடுகள் இமைக்கமறந்த
பொழுதில் உணர்ந்தேன்,
வளையல்களில் ஒன்றோ
எனத்தோன்றும் உன்கைகடிகாரம்
கடந்துசெல்லும் உணரமுடியாத
காலத்தைகாட்டி சிரிப்பதை!

கவனித்தவளாய் 'நேரமாகிவிட்டது
பிறகுபார்க்கலாம்' என்று
உன் வழிநோக்கித்திரும்பினாய்
'
நீ திரும்பும்முன் சற்றேகவனித்தேன்,
குளித்துவிட்டு கூந்தல்துடைத்து தலைசீவி
நடுவாய் வைத்திருந்த வகுடை!
திரும்பியபின் அழகாய் தரிசித்தேன்,
இறையைதொழுது சூடியிருந்த மல்லிகையை!
'
நீயும் கடந்ததால்
உனை காணாது
வலுவெல்லாம் இழந்து
கதிரவன் வீழ்ந்தது,
மாலை மறைந்தது
மதியும் எழுந்தது
'
வகுடாய் என்னையும்
மல்லிகையாய் உன்னையும்
உன்னிடத்தில் வைத்துக்கொண்டாய்
பிரிக்கும் கூந்தல் பகுதியாய்
இந்த காரிரவு நம்மிடையே!
'
மல்லிகை நிலவை வகுடாய்
அணிவகுத்து நின்ற நட்சத்திரங்கள்
இப்பொழுது சூழ்ந்து நிற்கின்றன!

அதுபோல் கூந்தலைவென்று
வகுடு மல்லிகையை சூழும்
மல்லிகை இரவுகள்
தூரத்தில் தெரியும் நம்பிக்கையில்,
கடந்து செல்லும் இந்த
தனிமை இரவுகளை
நான் கவிதையில் களிக்கிறேன்...

செவ்வாய், டிசம்பர் 25, 2007

பூக்களில் உறங்கும் மௌனங்கள்


புரிந்தபோதும் புரியவைக்க இயலா
சுயத்தின் சிந்தனைகள்

தீட்ட விரும்பி வரையாது
கிழித்த ஓவியங்கள்

வடிக்க நினைத்து எழுதாது
அழித்த வரிகள்

மொழிய நினைத்து பேசாது
ஊமையான வார்த்தைகள்

சந்திக்க நினைத்து பார்க்காது
மறைந்த முகங்கள்

தொண்டைக்குள் சிக்கி கடைசிவரை
வெளிவரமறுத்த விருப்பங்கள்

என் பிழைக்கு தண்டனை ஏற்றபோதும்
இதழ் திறக்கா நண்பனின் காரணங்கள்

அவளின் கேள்விகளுக்கான பதிலை
மொழியாமலே கடத்திய நொடிகள்


என மனதின் ஆழத்தில்
மலராது போன பூக்களே
உங்களில் உறங்கும் மௌனங்கள்
என்னுள் இனியேனும் விழிக்கட்டும்

ஞாயிறு, டிசம்பர் 23, 2007

கனவே!


மூடிய இமைகளுக்குள்
காட்சிகள் மறைந்து போக
நிஜம்போல் நிழல்தனை
காட்டிய என் கனவே

நிஜமது மீண்டும்
ஒருமுறை வேண்டும்
விழிகளுக்குள் வாராய்
என் கனவே

வருவாய் என
துயில்தனில் விழித்திருக்கிறேன்
தருவாய் என
விழிகளுக்குள் பார்த்திருக்கிறேன்

சிப்பிக்குள் அரிதாய்
உதிக்கும் முத்து,
அதனினும் அரிதாய்
இமைகளுக்குள்
உதித்த கனவே
தேடுகிறேன் இன்று

நிழல் தரும் நிழலை
நிரந்தரமாக்கிப்போவாய்
என காத்திருக்கிறேன்
உறக்கத்தில்

வந்துவிடு
ஒரே ஒருமுறை,
நான் மீளா
துயில் கொள்ளும்முன்...

வெள்ளி, டிசம்பர் 14, 2007

டாலர் கனவுகள்!


ஈன்றவளின் குறலின்றி கண்ணயர்ந்ததில்லை
இன்றோ தொலைபேசியை எடுக்க
டாலரை கணக்கிடும் மனம்!
பெற்றவரை தொலைவில் விட்டு
இங்கே சில கனவுகளில்

கடல்கடக்கும் சகோதரனுக்காய்
வேலை பலுவின் மத்தியிலும்
'ஷாப்பிங்' செய்த அண்ணன்
உறவுகளை கடந்து வந்து
இங்கே சில கனவுகளில்

பிரியும் தினம் அறிந்த போதிலும்
மீண்டும் மீண்டும் கேட்கும் அறைநண்பர்கள்
நண்பர்களின் அரவணைப்பை தாண்டி
இங்கே சில கனவுகளில்

விருந்துகள் கொடுத்து மகிழ்ந்தாலும்
உலாபேசியில் பூரித்தாலும்
உள்ளார்ந்த பயம்தனை காணத்தவறா தோழமை!
தயக்கங்களை மூட்டைகட்டி
இங்கே சில கனவுகளில்

நண்பர்கள் வழியனுப்ப,
முகம் தெரியா தோழி
வாழ்த்துக்கள் கூரியனுப்ப,
ஈரப்புன்னகைகள் சுமந்தபடி
இங்கே சில கனவுகளில்

உறவுகளிடம் சொல்லிவிட்டு
உரிமைகளிடம் சற்றுகலங்கிவிட்டு
கண்டங்கள் கடந்துவந்து,
அழகாய் புன்னகைக்கும் சிகப்பு மனிதர்களின்
மத்தியில் வியப்பாய் வியக்கிறேன்

தாய்தேசத்தை நினைவில் விட்டு
பூமிபந்தில் பாதிதூரம் கடந்திந்த
டாலர் தேசத்தில் கேளாமலே தொடர்கிறது
எனதிந்த டாலர் கனவுகள்.....

சனி, டிசம்பர் 08, 2007

என் ஜன்னலோரம்...


என் ஜன்னலோரம் பூக்கும் ரோஜாவே
தனிமை இரவு இது
துயிலும் நகரம் இது
விழித்திருப்பது நீயும் நானும்

அந்நிய பூமி இது எனை
அந்நியனெனும் தேசம் இது
அன்யோன்யமாய் நீ மட்டும்
அன்பு ரோஜவே

தொலைவாய் வந்தாலும் முகம்
தொலைந்து போய்விடாமல்
தொல்லை கொடுக்க
தொலைவில் இருந்து
உன்னை அனுப்பினாளோ

கூந்தலின் வளவளப்பில்
வழுக்கிவிழும் பயத்தில்
பற்றிக்கோள்ள முட்கள் கொண்டாயோ
அதே பயத்தில்தான் விரல்களில்
சற்றே நகங்கள் கொண்டேன்

பிரிந்தபோதும் பிரியாததாய் பிரிந்த
தருணத்தில் அவள் கண்களில் கொண்ட
கண்ணீர்துளி போல் உன் இதழ்களில்
ஏந்திய பனிதுளியும் ஏனோ

ஞாபகங்களை மறக்க
நினைவுகளை கடந்து வந்தேன்
நினைவுகளை மீண்டும் ஞாபகங்களாக்கி
எனை கொல்வதும் ஏனோ

விடியல் விளிக்கும் நேரமிது
நகரம் இன்னும் விளிக்கவில்லை
நாமோ இன்னும் துயிலவில்லை
மலர்ந்து கொண்டிருக்கிறோம் ரோஜாவே

பொழுதும் விடிந்தது
நாளும் மலர்ந்தது
உடன் நாமும் ரோஜவே

சற்றே சென்று நாளின்
முடிவில் திரும்புகிறேன்
என் ஜன்னலோர ரோஜாச்செடியே
அதுவரை காத்திரு
நாம் இரவில் மீண்டும் மலர்வோம்...

வியாழன், ஜூலை 26, 2007

வேண்டும்...


எதையும் நினையா ஓர் நிமிடம்
எவரையும் எண்ணா ஓர் எண்ணம்


தனித்து இல்லாமல் ஓர் தனிமை
அந்த தனிமைக்குள்ளே ஓர் முழுமை

முழுமை கொண்ட ஓர் உண்மை
முழு உண்மை பேசும் ஓர் தருணம்

தவறுகள் இல்லா ஓர் புரிதல்
புரிதலே தேவையில்லா ஓர் அறிதல்

மூடிகள் இல்லா ஓர் முகம்
எதிர்பார்ப்புகள் இல்லா ஓர் உயிர்

அனைவரும் சமமாய் ஓர் பார்வை
ஒரே பார்வை அது அனைவருக்கும்

நல்லவை மறக்கா ஓர் மனிதம்
எதையும் மறைக்க ஓர் சுதந்திரம்

இயல்பை மாற்றா ஓர் நெஞ்சம்
எதர்க்கும் நடிக்கா ஓர் இதயம்

இழப்புகளை ஏர்க்கும்
மனம்
இழந்த
வர்க்காய் ஏங்கா மனபக்குவம்

காரணம் அற்ற ஓர் கடவுள்
சம்பிரதயங்கள் இல்லா ஓர் அன்பு

இரகசியங்கள் இல்லா ஓர் நட்பு
பேதமை இல்லா ஓர் தோழமை

கவிதைகள் இல்லா ஓர் தேவை
தேவைகள் இல்லா ஓர் கவிதை

விரும்பும் பொழுதில் ஜனனம்
இன்னும் விரும்பும் தருணத்தில் மரணம்


வேண்டாம் வேண்டாம்

எதுவும் வேண்டாம்
ஆசைகள் இல்லா ஒர் மனம்
அதுவே என்றும் வேண்டும்.....

வெள்ளி, ஜூலை 06, 2007

பயணத்தில்...


வசந்தத்தில் ஓர் நாள் அது
கிளிகள் கூட்டை தேடும் தருணமது
இருளுக்கு ஒளி வழிவிடும் பொழுது அது
சப்தங்களை மௌனம் கௌவும் நேரமது

சூழும் இருளை பரவும் அமைதியை,
ஒளி ஒலியால் கிழிக்கும் வாகனங்கள்
எப்போழுதாவது கடக்கும் ஒற்றை
சாலைதன் ஓரமாய் என் மெய்

வழியில் வரும் தென்றலதை மேனி தழுவ
எதிரில் வரும் மேகமதை தேகம் கொள்ள
நானும் என் தனிமையும் கைகோர்த்து
ஓர் நடை பயணதில்

தோற்றமென்பது இருந்ததில்லை
இறுதியென்பது இருப்பதில்லை
ஆரம்பங்களும் முடிவுகளும்
மட்டும் ஏராளம்

துளியில் கைதாகி நிற்கின்றோம்
அதுவே ஆரம்பத்தின் விதையானது
கருவறையை முழுதும் உணராமல்
பயணத்தின் இப்பகுதியில் ஆர்த்தமில்லை

உருயின்றி சுற்றிதிரிந்தோம்
உருகொண்டு தத்தளிக்கின்றோம்
உருயின்றி முக்தி பெருவோம்

லீலைகளில் இத்தோற்றமின்றி
இறையில் ஏது அர்த்தம்
பயணத்தில் இப்பகுதியின்றி
பயணத்தில் ஏது அர்த்தம்

ஒற்றைசாலை திருப்பம் காண
பச்சை போர்வை போர்த்திய
அழகிய கானகம் காத்திருக்கிறது

பயணம் இன்னும் முடியவில்லை
அமைதி வனத்தில் அது தொடர
அதனூடே யோசித்து பார்க்கிறேன்

நீயும் யோசித்துவை தோழா
நமது இந்த பயணம் தான்
என்றும் முடிவதே இல்லையே...

வியாழன், ஜூன் 07, 2007

இருளில்...


விபூதி பூசியாயிற்று
தேவர்களை தொழுதாயிற்று
பலன் கிடைத்தபாடில்லை

முகம் வியர்க்க
உடல் துடிக்க
நள்ளிரவில்
சட்டென்று விழித்தேன்
'
கவிழ்ந்திருந்தது இருள்
சூழ்ந்திருந்தது அமைதி
'சே..' என எண்ணவைக்கும் கனவுகள்
'
கனவினை
தலயனை ஓரமாய்
வழியவிட்டு
புரண்டு படுத்தேன்
'
உறக்கம் வருவதாயில்லை
நீரரும்பி
மணி பார்த்து
மீண்டும் படுத்தேன்
'
எனை அடிக்கடி
வெடிக்கவைக்கும்
கனவுகளை
கண்கள்மூடி தினமும்
இரவின் இருளில்
எதிர்கொள்கிறென்
பயத்துடன்...

வெள்ளி, மே 04, 2007

உனக்கு பிறகான நாட்களில்...


அன்பே நாட்கள்
நகரத்தான் செய்கின்றன

நீ இல்லை இருந்தும் ஆதவன்
தினமும் உதிக்கத்தான் செய்கின்றது

உன் ஓளியின்றி

நீ சென்ற பின்னறும் பௌர்னமி
மாதமொருமுறை ஒளிரத்தான் செய்கின்றது

உன் குளிர்ச்சியின்றி

நீ கடந்துவிட்ட பிறகும் மலர்கள்

தினமும் மலரத்தான் செய்கின்றன
உன் வாசமின்றி
'
நினைவுகள் பூங்காயிருக்கையில் தேங்கிக்கிடக்கின்றன
தொடர்ந்து தேங்கத்தான் செய்கின்றன

உன் சுவாசமின்றி

பயத்திற்க்கு யதார்த்தத்தை காரணம் சொன்னாய்
தைரியயதார்த்தங்கள் நிகழத்தான் செய்கின்றன
உன் பார்வையின்றி


நம்பிக்கை விடுத்து உறவை துறந்தாய்
நம்பிக்கைகள் தொடரத்தான் செய்கின்றன
உன் வார்த்தையின்றி

'
அடைந்தவர் கூறலாம் கதைகள்
இழந்தவர் எழுதலாம் கவிதைகள்
எழுத்துக்கள் தொடரத்தான் செய்கின்றன
உன் சொற்களின்றி

'உன்னோட நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே'
- வரிகள் உண்மைதான், மரணங்கள் தினமும்
நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன
உன் அருகாமையின்றி
'
யதார்த்தமே முதல்முக்கியம்
பாடம் சொல்லிப்போனாய்

நேற்றைய இழப்புகள்
இன்றைக்கான பதில்கள்...
இன்றைய குழப்பங்கள்
நாளைக்கான புன்னகைகள்...

யதார்த்தம் இதுதானே
யதார்த்தத்தை காதலிக்கிறேன்
நான் காதலை காதலிக்கிறேன்

கண்களில் காதலை தோற்றுவிதவளின்
கண்களில் தோன்றிய காதல்
நமக்கன்று எனும்போது
இருள்சூளத்தான் செய்கின்றது
இருந்தும் காட்சிகள் தொடரத்தான் செய்கின்றன
உன்பிம்பம் தவிர வேறன்றி


உறைந்துவிடவில்லை காலத்தின் வேகத்தில்
நொடிகளை காதலிக்கிறேன்

பகலின் பின்தோன்றிய
இரவினும் பின்தோன்றும்

விடியலை நோக்கியிருக்கிறேன்


எதுவாகிலும் அன்பே,
இங்கே நாட்கள் நகரத்தான் செய்கின்றன...