கேள்விகள் விடையின்றி கழிந்தன என்னளவில்
கேள்விகளே இங்கில்லை அவளளவில்
இடையில் கடந்திருந்ததோ பரிதாபமாய் காலம்!
கேள்விகளுக்கு உயிரில்லை என்றாள்
இறந்த அவைகளை நான்
இறக்கும்வரை சுமக்கவைத்தாள்
ஆரம்பங்கள் அழகுதான்
அதில் தொடங்குவது புன்னகைகள்,
தொலைந்ததாய் கூறும்போது
எஞ்சுவது நீர்துளிகள் மட்டுமே!
காரணங்கள் அவை அறிவதரிது
முகம் நான் இனி பார்ப்பதரிது
ஓர்முகம் என்றும் அறியாதது!
பாதைகள் மங்கும் தூரம் தூரத்திலில்லை
இருந்தும் காலம் இன்னும் முடிந்துவிடவில்லை
கேள்விகள் மீண்டும் உயிர்பெறலாம்
அதுவரை மீண்டும் நான் பேசும் ஊமையாய்!
ஒருமௌனம் கலைய வேறு உரை
ஒருகூண்டு திறக்க வேறு சிறை
இங்கே உரைகளும் சிறைகளும்
மட்டுமே மாறுகின்றன
அவள் தொலைத்தது அங்கே மறுமுகமா
நான் தொலைத்தது இதில் நிகழ்வுகளா
நாங்கள் தொலைத்தது இங்கே காரணங்களா
எதுவாகிலும் இன்று தொலைந்து போனதோ
இருவருக்குமிடையே வார்த்தைகளற்ற மௌனங்கள்!